Saturday, 29 August 2020

கண்தோஷம் நீக்கிய ஈசர்

 கண்தோஷம் நீக்கிய ஈசர்:

அக்காலத்தில் ஊருக்கு ஊர் தேவரடியார் இருந்தனர். ஒவ்வொரு கோவிலிலும் இறைத்தொண்டு ஆற்றினர். இன்றைய திருச்சி மாவட்டம் திருநெடுங்களம் அன்றைய கவிரநாட்டுக்குள் இருந்தது. இந்நாட்டின் கீழேயே மலையடிப்பட்டியும் இருந்தது. திருநெடுங்களத்தில் இருந்த தேவரடியார் பெண் ஒருவர், பூச்சிக்குடியை சேர்ந்த ஆவுடையத்தேவர் என்பவரிடம் தொடர்பில் இருந்தார். அப்பெண்ணிடம் அப்பகுதியில் இருந்த பிராமணர் ஒருவரும் இருந்தார். இதைகேள்விபட்டு ஆத்திரப்பட்ட ஆவுடையத்தேவர் அப்பெண்ணையும், அந்த பிராமணனையும் கொன்றுவிட்டு, மலையடிப்பட்டிக்கு தப்பிச்சென்று விடுகிறார். இக்கொலை பாவத்தால் அவருக்கு கண்பார்வை போய்விடுகிறது. அச்சமயம் முத்தரைய மன்னன் எழுப்பிய வாகீசர் எனும் சிவனை மனதில் எண்ணி, தன்னுடைய வயலில் ஒருபகுதியை வாகீசருக்கு தருவதாய் வேண்டிக்கொள்கிறார். அதிசயமாய் அவருக்கு பார்வை கிடைத்துவிடுகிறது. எனவே தான் நேர்ந்து கொண்டபடி தன்னுடைய வயலில் ஒருபகுதி வாகீசருக்கு அளித்துவிடுகிறார். இந்த வயலுக்கு எவரேனும் தீங்கு ஏற்படுத்தினால் அவர் கங்கைகரையிலே காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார் என்று எழுதியும் வைத்துள்ளார். இச்சாசனம் மலைய்டிப்பட்டி குடைவரை கோவிலில் உள்ளது.





Wednesday, 26 August 2020

கல்வெட்டில் கிடாவெட்டு

  கல்வெட்டில் கிடாவெட்டு:


பட்டிகளில் அடைக்கப்படும் நூற்றுக்கணக்கான ஆடுகள் பல்கி பெருகவும், அவ்வினங்கள் நோய்நொடியின்றி இருக்கவும், அந்த பட்டியிலிருந்து ஒரு கிடாக்குட்டியை தேர்ந்தெடுத்து தத்தம் குலதெய்வங்களுக்கு  நேர்ந்துவிடுவர். பின் அக்கிடாக்குட்டி பெரிதானவுடன், அதற்கு ஒருநாள் குறித்து பலியிடுவர். உயிர்பலியிடும் இந்நிகழ்வு குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகளில் பயின்று வருகிறது. அதுகுறித்து காண்போம். புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூரில் கி.பி 1407 ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று, பொன்னன் கோவன் அழும்பன் என்பவர்  அவ்வூரில் சக்தி திருவிழாவிற்காக வண்டி வண்டியாய் கிடாக்களை ஏற்றி வந்து, அவற்றை  சந்து சந்திகளில் பலியிட்டுள்ளான். கலங்காத இவனது மனதை கண்ட ஊரார் இவருக்கு "கலங்காத கண்டக்கோன்" எனும் பட்டமளித்துள்ளனர்.


அதே புதுக்கோட்டையை சேர்ந்த 1628 ம் ஆண்டு ராங்கியம் கல்வெட்டு ஒன்று அங்குள்ள பிடாரி கோவிலில் கிடாய் பலியிட்ட செய்தியை கூறுகிறது.





Wednesday, 12 August 2020

கல்வெட்டுகளில் முஸ்லீம்கள்

 இந்து-முஸ்லீம் ஒருமைப்பாடு:

இந்து முஸ்லீம் என இரு மதத்தினரும் ஒருமைபாட்டுடன் இணைந்து, ஒருவருக்கொருவர் அறமாற்றியதற்கு அக்காலத்திய தமிழ்கல்வெட்டுகள் துணைபுரிகிறது. அவற்றுள் சிலவற்றை காண்போம்.

கல்வெட்டுகளில் முஸ்லீம்கள்:

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலுக்கு பலரும் தம் பங்கிற்கு உதவிபுரிந்துள்ளனர், அதில் தஞ்சை புறம்படி ராஜவித்யாதர பெருந்தெருவில் வாழ்ந்த "சோனகன் சாவூர் பரஞ்சோதி" எனும் இஸ்லாமியரும் ஒருவர். சோனகன் என்பது அராபியரை குறிக்கும் சொல். சாவூர் என்பதனை "ஜாஃபர்" என்பதன் தமிழ் வடிவமாய் கருதப்படுகிறது!சாவூர் என்பதை ஊராகவும் கருதுவர், ஆனால் அப்பெயரில் ஊர் எதுவும் அங்கு இல்லை. பரஞ்சோதி அவரது சிறப்புபெயர். இவர் இராஜேந்திரனின் திருமந்திர ஓலைநாயகமாகவும் பிற்காலத்தில் பணியாற்றியுள்ளார். பெருவுடையாருக்கு அளித்த அணிகலன்களில் "சோனகச்சிடுக்கு" என்பதும் ஒன்றாகும். ஆனைமங்கல செப்பேட்டில் "துருக்கன்" அமுதன் எனும் நபரின் பெயர் வருகிறது! 

குலசேகர பாண்டியனின் அமைச்சராக பிள்ளை பட்டமுடைய "தகியுடீன்" எனும் அமைச்சர் வருகிறார் இவர் சில கல்வெட்டுகளில் முதலியார் பட்டமும் பெற்றுள்ளார். 14 ம் நூற்றாண்டு சேர மன்னனான புகழ்பெற்ற உதயமார்த்தாண்டன் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டனத்தில் "மக்தூம்பள்ளி" எனும் பள்ளிவாசலை ஏற்படுத்தி அதற்கு "உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி" என்று தன் பெயரை சூட்டுகிறார். அங்கு பணிபுரிந்த அபுபக்கர்காதியாருக்கு 'உதயமார்த்தாண்ட காதியார்' என பெயரும் இட்டான். மேலும் காயல்பட்டினத்தில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு எல்லாமதத்தினரும் நாலுபணத்திற்கு கால்பணம் இந்த பள்ளிவாசலுக்கு மகமையாக தர ஏற்பாடும் செய்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் ஒருகோல் சுல்தான் பள்ளிவாசலுக்கு 7ம் நூற்றாண்டைசேர்ந்த கூன்பாண்டியன் 14ஆயிரம் பொன்கொடுத்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம்(பீபிகுளம்?) சிறுத்தூர், திருப்பாலை ஆகிய ஊர்களை தானமாய் அளித்ததாகவும், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாய் சர்ச்சை மூண்டு அதன்பின் வீரப்பநாயக்கர் பண்டைய ஆவணத்தை சரிபார்த்து பழையமுறையே தொடரசெய்ததாகவும் கல்வெட்டு ஒன்று இன்றும் அப்பள்ளிவாசலில் உள்ளது. அக்கல்வெட்டு "சிவமயம்" என்று தொடங்குவது விந்தை. தஞ்சை செவப்பநாயக்கர் நாஞ்சிக்கோட்டை கள்ளரான மண்ணையார்களை கொண்டு தஞ்சை சமுசுபீரு பள்ளிவாசலுக்கு 7 வேலி நிலம் அளிக்கச்செய்தார். மராத்தியர் காலத்தில் படைக்காகவும், யுனானி மருத்துவரத்திற்காகவும் நிறைய முஸ்ஸீம் குடியேற்றம் தஞ்சைபகுதியில் நிகழ்ந்துள்ளது. வடக்குஅலங்கம் படேஉசேன் தர்கா போன்ற பல நிறுவனங்கள் இன்றும் மராத்திய மன்னர் மேற்பார்வையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தஞ்சை முஸ்லீம்கள் குடும்பத்தினருக்கு மராத்தியர் அளித்த கொடைகள் பற்றி மோடிஆவணங்களில் ஏகப்பட்ட குறிப்புகள் உள்ளது. தொண்டி கைக்காளன் குளம் கலிங்கு மருதுபாண்டியரால் கட்டப்பட்டது. அப்போது அப்பகுதியின் நிர்வாகி அபூப் சகா மரைக்காயர் என்பவராவார்.

மெக்கன்சி ஆவணங்களில் முஸ்லீம்கள்:

காங்கேயம் பகுதி மன்றாடியார் குடும்பம் ஒன்றில் ஊனமுற்ற பெண் ஒருத்தி பிறந்தாள், அவளது சகோதரர்கள் சொத்தில் பங்களிக்க மறுக்கவே, "துலுக்க சருதார்" அமைப்பிடம் முறையிட அவர்கள் விசாரித்து, உரிய நிலம் பெற்றுதந்தனர். இக்கூற்றை மெக்கன்சி ஆவணமும், வெள்ளையம்மாள் காவியமும் உறுதிபடுத்துகிறது. ஸ்ரீரங்கம் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் பரம்பரைக்கும், ரெங்காச்சாரியார் பரம்பரைக்கும் பத்து தலைமுறையாக, சில உரிமைகள் தொடர்பான பஞ்சாயத்தினை 1797 ல் ஆர்காடு நவாப் சாயபூ தீரவிசாரித்து பைசல் செய்து வைத்தார். 

இந்து கோவிலுக்கு உதவிய முஸ்லீம்கள்:

1758 ல் தஞ்சை மேலவீதி கொங்கணீஸ்வரர் கோவிலுக்கு பதினெட்டுபட்டாடைகளை மகமை குழுவினர் அளித்துள்ளனர். முகம்மதுராவுத்தர், மீராலெப்பை போன்றோர் இதில் அடங்குவர். விரிஞ்சிபுரம் சிவன்கோவில் தேர் மசூதிவழி செல்லுகையில் மசூதியின் சார்பில் சிறப்புபூசை நடைபெறுகிறது. கோவை குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலுக்கு திப்புசுல்தான் கொடையளித்துள்ளார். மேலும் மின்னக்கல் கோபாலகிருஷ்ணன் கோவிலுக்கு 575 வராகன் சோடிகை மானியமளித்துள்ளார். அத்திவரதர் 1688ல் பாதுகாப்புகருதி உடையார்பாளயம் காட்டுப்பகுதிக்கு வந்தார். அவரது அழகில் மயங்கிய பாளையக்காரர் அதை திருப்பியளிக்க மறுக்க, ஆத்தான் திருவேங்கட ராமானுஜ ஜீயர் கர்நாடக நவாபிற்கு வேண்டுகோள் அனுப்ப, அவரது "வேண்டுகோளை(!)" ஏற்று1710 மீண்டும் காஞ்சி வந்தடைந்தார் அத்திவரதர். நெல்லையப்பர்கோவிலில் இன்றும் வழிபாட்டிலுள்ள உமாமகேசுவரரை தானமளித்தவர் அசாருதீன். பனைமலை தாளகிரீசுவரர் கோவில் மண்டபம், படிஅமைத்தவர் நவாபு சடெல்லேகான் சாயுபு.

இவை கொஞ்சமே இன்னும் பெரிய பட்டியலே உள்ளது.


"யாதும் ஊரே யாவரும் கேளிர்"



சாவூர் பரஞ்சோதி