Tuesday, 28 July 2020

பெருகமணி பரமேஸ்வரர்

பெருகமணி பரமேஸ்வரர்:
திருச்சி-குளித்தலை சாலையில் சிறுகமணிக்கு அருகேயுள்ள ஊர் பெருகமணி. ஆயிரம் வருடமுன்பு இவ்வூர் பெரியவெண்மணி என அழைக்கப்பட்டுள்ளது, இன்று மருவி பெருகமணி ஆகிவிட்டது. இவ்வூரில் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. பாழ்பட்டு கிடந்த கோவிலை ஊரார் சிலர் செப்பனிட்டு தற்போது வழிபடும் நிலையில் உள்ளது.
கோவில் அமைப்பு:
விமானம், வளாகம் இன்றி இன்று கருவறையுடன் மட்டுமே காட்சியளிக்கிறது இக்கோவில், தற்காலத்திய சுண்ணாம்பு பூச்சினால் கல்வெட்டுகள் அழிந்து மறைந்து, இரு கல்வெட்டுகள் மட்டுமே தற்சமயம் காணக்கிடைக்கிறது. மூன்று திசைகளிலும் கோட்டங்கள் காணப்படுகிறது. கோட்டத்தில் அன்றைய தெய்வங்கள் இல்லை, எங்கு எந்த அருங்காட்சியகத்தில் உள்ளதோ? அதற்கு மாற்றாய் இன்றையகால சிலைகள் வைத்துள்ளனர். மற்றபடி அன்றைய சோழர்கால கோவிலுக்கேற்ற உறுப்புகளுடன் முழுமைபெற்ற கோவிலாய் அன்று இருந்திருக்கும். சண்டிகேஸ்வரர் மற்றும் சிவலிங்கம் மட்டுமே அக்காலத்தவர்.
கல்வெட்டு செய்திகள்:
1.கருவறையின் வடக்கு தாங்குதளத்தில் கோப்பரகேசரி(உத்தமசோழன்?)பன்மரின் ஆட்சியாண்டு அறியமுடியாத ஓர் கல்வெட்டும் இரு துண்டு கல்வெட்டும் உள்ளது. இதில் இறைவன் பெருவெண்மணி பரமேஸ்வரர் என அழைக்கப்பட்டது தெரிகிறது. இறைவனின் வழிபாடு, மற்றும் படையலுக்கு நிலமளித்தசெய்தியும், அப்பகுதியில் இருந்த பிடாரிகோவில் ஒன்றையும் இக்கல்வெட்டுகள் கூறுகிறது.

2.இரண்டாம் கல்வெட்டு 14ம் நூற்றாண்டைச்சேர்ந்தநாயக்கர் கால கல்வெட்டாகும், வீரகம்பணஉடையாரின் கல்வெட்டு இது, இக்கல்வெட்டின் வாயிலாய் அன்று சோழர்காலத்தில் இருந்த வளநாடும், கூற்றமும் மாறாமல் அவ்வாறே நாயக்கர்காலம் வரையிலும் வழங்ப்பட்டதை பறைசாற்றுகிறது. இராஜகம்பீர வளநாடு சூரலூர் கூற்றத்தின் கீழ் இவ்வூர் அமைந்துள்ளதை கல்வெட்டு கூறுகிறது. சூரலூர் கூற்றம் என்பதூ பராந்தகர் காலம் முதல் வழங்கிவரும் பெயர், தஞ்சைபெரியகோவிலிற்கு மெய்காப்பாளர் ஒருவர் கூட இக்கூற்றத்திலிருந்து சென்றதை தஞ்சை கல்வெட்டுகள் எடுத்துரைக்கிறது. நாயக்கர் காலத்தில் இறைவன் திருவக்கீச்வரர் என அழைக்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாய் இன்றுவரை இறைவன் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பதினாலடிகோல் இங்கு நிலமளந்தகோலாக குறிக்கப்படுவது முக்கியமான ஓர்செய்தி. மழவதைரையன் பிறையான் என்பவரின் மகன் இங்கு ப்ரீதிதானம் என்ற ஓருவகை தானமளித்துள்ளார். நிறைய வாய்க்கால்கள் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.

பிரதோசம், சிவராத்திரி முதலிய நாட்களில் இக்கோவில் முக்கியத்துவம் பெற்றுவிளங்குகிறது. ஏனைய நாட்களில் ஆட்கள் வருவது அரிது.




அழுந்தியூர் குலோத்துங்க சோழ விண்ணகரம்


அழுந்தியூர் குலோத்துங்க சோழ விண்ணகரம்:
திருச்சி -விராலிமலை சாலையில் அமைந்துள்ள ஊர் அழுந்தூர்.அக்காலத்தில் அழிந்தியூர் என அழைக்கப்பட்டுள்ளது. செந்தலை கல்வெட்டில் முத்தரையர் சுவரன் மாறன் வென்றதாய் கூறும் அழிந்தியூர் இவ்வூரே ஆகும். இங்கு வரகுணீஸ்வரர் எனும் சிவன் கோவில் உள்ளது.

இப்பெயரை வைத்து இக்கோவில் இரண்டாம் வரகுணன் கால கோவில் என கருதலாம். அதன்பின்னர் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவில் சீரமைக்கப்பட்டது.

இக்கோவிலில் உள்ள குலசேகரபாண்டியரின் 41ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று, இங்கிருந்த சுவடழிந்த குலோத்துங்கசோழ விண்ணகரம் எனும் கோவில் குறித்த குறிப்பொன்றை தருகிறது.
இங்கே படத்தில் காணும் சிலை 9ம் நூற்றாண்டின் ஆரம்பகால சிற்பமைதியில் உள்ளது. இக்கோவில் பின்னர் குலோத்துங்கன் காலத்தில் சீரமைக்கப்பட்டு "குலோத்துங்கசோழ விண்ணகரம்" என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.


இன்று இக்கோவிலின் கட்டட அமைப்பு கிடைக்காவிடினும், இப்பெருமாள் சிலை மட்டுமே கிடைத்தது.
இச்சிலை இன்று திருச்சி தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.




ராஜராஜ விஜயம்

ராஜராஜ விஜயம்:
ராஜராஜசோழன் நினைவாய் ஸ்ரீராஜராஜநாடகம் எனும் நாடகமானது பெரியகோவிலில் நடைபெற்றுள்ளது, அதைபோன்றே

"ஸ்ரீராஜராஜவிஜயம்" எனும் ஓர் இலக்கியம் இயற்றப்பட்டு, அக்காலத்தில் திருவிழாநாட்களில் வாசிக்கப்பட்டுள்ளது. இதனை வாசிக்க ஆட்களையும் நியமித்துள்ளனர். 
எழுத்தமைதி வைத்து இக்கல்வெட்டு 11 ம் நூற்றாண்டாய் தெரிகிறது. ராஜராஜர் காலத்திலோ, அல்லது அதற்கடுத்த மன்னர்களாலோ தொடர்ந்து இந்நிகழ்வு நடந்திருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாய் இக்கல்வெட்டு தரும் தகவல்களை முழுமையாக அறிய இயலவில்லை. இன்று இக்கல்வெட்டு கோபுரத்தின் வெளிப்புற அடித்தளத்தில் மண்மூடி காட்சியளிக்கிறது.



இடம்: திருப்பூந்துருத்தி



இந்து-முஸ்லீம் ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

இந்து-முஸ்லீம் ஒற்றுமையை கூறும் கல்வெட்டு:
நவகிரக பரிகாரதலமான திருநாகேஸ்வரம் கோவிலின் உட்பகுதியில் "குன்று மாமுலையம்மன்" சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மூலையில் ஓர்பலகைக்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்து-முஸ்லீம் மக்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்திய தகவல் உள்ளது.
சகம்1705(கி.பி.1783) ஐ சேர்ந்த கல்வெட்டு இது. மொத்தம் 39 வரிகளையுடையது.இதில் திருநாகேஸ்வரத்தின் தெற்கு எல்லையான உப்பிலியப்பன் கோவில் முதல், வடக்கு எல்லையான ராவுத்தர்கடை வரை அரைக்காசு வீதம் மகமை வசூலித்து விளக்கெரித்துள்ளனர். இதில் இரண்டு கடைகளின் பணம் பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காரியம் நடைபெறுவதை ஒருவர் கண்காணிக்க வேண்டும்.நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களை முன்னரே கணக்கெடுத்து அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.
இச்செயல்களுக்கு எவறேனும் இடையூறு செய்தால், அவர் இந்துவெனில் "கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற" தண்டனைக்கும், இஸ்லாமியரெனில் "மக்கா நகரில் செய்யக்கூடாததை செய்த தோஷத்திற்கு" ஆளாவார்கள், என்று கூறப்பட்டுள்ளது.
1783 ஐ போல இன்றும் இவ்விரு மதத்தினவரும் இணைந்து விளக்கெரிப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 27 July 2020

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்:
Title பார்த்து சிரிக்ககூடாது கல்வெட்டில் அப்படிதான் இருக்கு.
மடத்துக்குளம் (பழனியிலிருந்து கோவை செல்லும் NH 209 சாலை) என்னும் ஊரில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள கடத்தூர் என்னும் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது இக்கோவில், பெரும்பாலும் சிவாலயங்கள் நீர்நிலையொட்டியே அமைந்திருக்கும், இக்கோவிலும் அமராவதி ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது.
சுமார் 750 வருடம் முன்பு கொங்கு விக்ரமசோழன் ஆட்சியில், திரிபுவனசிங்கன் எனும் அரசியல்தலைவர், "பிரமேகம்" எனும் நோய் நீங்கியதற்காக நிலம்தானம் அளித்துள்ளார்.

(சித்தமருத்துவ குறிப்பின்படி "மேகநோய்" என்றால் சிறுநீரகதொடர்பான நோய்கள் என அறியப்படுகிறது.மேலும் இருபதிற்கும் மேற்ப்பட்ட சிறுநீரக(மேக) நோய்கள் உள்ளதென சித்தமருத்துவ நிகண்டுகள் கூறுகிறது! இதில் பிரமேகம் என்பதனை நீரிழிவு நோய் என சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்) மருத்துவர்களால் போக்கமுடியாத நோயினை இறைவன் போக்குவார் என்ற நம்பிக்கை இன்றும் நம்மிடையே உள்ளது.தமிழகத்தில் மருந்தீஸ்வரர் என பெயரிடப்பட்ட சில கோவில்களும் உள்ளது. அப்பரின் குலைநோய் மருத்துவர்களால் நீக்கஇயலாது போய், பின் இறைவன் திருநீர்ரால் நீங்கியதனை இலக்கியத்தில் அறியலாம்.
கல்வெட்டு செய்தி:
கொங்குவிக்ரமசோழனின் ஆட்சியில், திரிபுவனசிங்கனுக்கு "பிரமேகம்"நோய்வந்து கடத்தூர் இறைவன் திருவருளால் நீங்குகிறது, இதனால் இறைவனின் இரவுவழிபாட்டிற்கோ அரிசிதானம் கொடுக்கிறான், இவ்வரிசி தொடர்ந்து கிடைக்க சில நிலங்களை தாரைவார்க்கிறான். இந்நிலம் உதயாதிச்ச சோழதேவன் என்பவன் துரோகியாய் மாறியதால், அவனிடமிருந்து பிடுங்கப்பட்ட அரசாங்க நிலம் ஆகும். இந்நிலத்திற்கான எல்லையும், வரிச்சலுகையும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த எல்லாஉரிமைகளையும் சேர்த்து, அரசின் ஆணைப்படி(திருமுகதிருவிள்ளம்) இறைவனுக்கு கொடுத்துள்ளார்.
மருந்தீஸ்வரர், என்ற கல்வெட்டு பெயர் இன்று மருவி, அர்ச்சுனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் "தென்திருமணஞ்சேரி" என Extra கதை சேர்க்கப்பட்டு, திருமணத்தடை நீக்கும் தலமாய் மாறிவிட்டது.

ஏழூர் மோநலஞ் சாத்தன்

கர்நாடாவில் கல்வெட்டு பொறித்த தமிழன்:

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ளது ஏழூர். அப்பர் பாடிய வைப்புத்தலங்களில் இவ்வூர் கோவிலும் ஒன்று. இவ்வூரிலிருந்து ஓர் தச்சன் கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்திலுள்ள தமுட்டுகல் எனும் கிராமத்திற்கு சென்று கன்னட மற்றும் வடமொழி கல்வெட்டு ஒன்றினை வெட்டிக் கொடுத்துள்ளார்.  அந்த கல்வெட்டின் இடப்புற விளிம்பில் தனது பெயரையும் வட்டெழுத்தில் பொறித்துவிட்டு வந்துள்ளார் இந்த தச்சன்,

"ஏழூர் மோநலஞ் சாத்தன்" என்பது இந்த தச்சரின் பெயராகும். இக்கல்வெட்டு 5 ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.