Tuesday, 28 July 2020

பெருகமணி பரமேஸ்வரர்

பெருகமணி பரமேஸ்வரர்:
திருச்சி-குளித்தலை சாலையில் சிறுகமணிக்கு அருகேயுள்ள ஊர் பெருகமணி. ஆயிரம் வருடமுன்பு இவ்வூர் பெரியவெண்மணி என அழைக்கப்பட்டுள்ளது, இன்று மருவி பெருகமணி ஆகிவிட்டது. இவ்வூரில் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. பாழ்பட்டு கிடந்த கோவிலை ஊரார் சிலர் செப்பனிட்டு தற்போது வழிபடும் நிலையில் உள்ளது.
கோவில் அமைப்பு:
விமானம், வளாகம் இன்றி இன்று கருவறையுடன் மட்டுமே காட்சியளிக்கிறது இக்கோவில், தற்காலத்திய சுண்ணாம்பு பூச்சினால் கல்வெட்டுகள் அழிந்து மறைந்து, இரு கல்வெட்டுகள் மட்டுமே தற்சமயம் காணக்கிடைக்கிறது. மூன்று திசைகளிலும் கோட்டங்கள் காணப்படுகிறது. கோட்டத்தில் அன்றைய தெய்வங்கள் இல்லை, எங்கு எந்த அருங்காட்சியகத்தில் உள்ளதோ? அதற்கு மாற்றாய் இன்றையகால சிலைகள் வைத்துள்ளனர். மற்றபடி அன்றைய சோழர்கால கோவிலுக்கேற்ற உறுப்புகளுடன் முழுமைபெற்ற கோவிலாய் அன்று இருந்திருக்கும். சண்டிகேஸ்வரர் மற்றும் சிவலிங்கம் மட்டுமே அக்காலத்தவர்.
கல்வெட்டு செய்திகள்:
1.கருவறையின் வடக்கு தாங்குதளத்தில் கோப்பரகேசரி(உத்தமசோழன்?)பன்மரின் ஆட்சியாண்டு அறியமுடியாத ஓர் கல்வெட்டும் இரு துண்டு கல்வெட்டும் உள்ளது. இதில் இறைவன் பெருவெண்மணி பரமேஸ்வரர் என அழைக்கப்பட்டது தெரிகிறது. இறைவனின் வழிபாடு, மற்றும் படையலுக்கு நிலமளித்தசெய்தியும், அப்பகுதியில் இருந்த பிடாரிகோவில் ஒன்றையும் இக்கல்வெட்டுகள் கூறுகிறது.

2.இரண்டாம் கல்வெட்டு 14ம் நூற்றாண்டைச்சேர்ந்தநாயக்கர் கால கல்வெட்டாகும், வீரகம்பணஉடையாரின் கல்வெட்டு இது, இக்கல்வெட்டின் வாயிலாய் அன்று சோழர்காலத்தில் இருந்த வளநாடும், கூற்றமும் மாறாமல் அவ்வாறே நாயக்கர்காலம் வரையிலும் வழங்ப்பட்டதை பறைசாற்றுகிறது. இராஜகம்பீர வளநாடு சூரலூர் கூற்றத்தின் கீழ் இவ்வூர் அமைந்துள்ளதை கல்வெட்டு கூறுகிறது. சூரலூர் கூற்றம் என்பதூ பராந்தகர் காலம் முதல் வழங்கிவரும் பெயர், தஞ்சைபெரியகோவிலிற்கு மெய்காப்பாளர் ஒருவர் கூட இக்கூற்றத்திலிருந்து சென்றதை தஞ்சை கல்வெட்டுகள் எடுத்துரைக்கிறது. நாயக்கர் காலத்தில் இறைவன் திருவக்கீச்வரர் என அழைக்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாய் இன்றுவரை இறைவன் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பதினாலடிகோல் இங்கு நிலமளந்தகோலாக குறிக்கப்படுவது முக்கியமான ஓர்செய்தி. மழவதைரையன் பிறையான் என்பவரின் மகன் இங்கு ப்ரீதிதானம் என்ற ஓருவகை தானமளித்துள்ளார். நிறைய வாய்க்கால்கள் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.

பிரதோசம், சிவராத்திரி முதலிய நாட்களில் இக்கோவில் முக்கியத்துவம் பெற்றுவிளங்குகிறது. ஏனைய நாட்களில் ஆட்கள் வருவது அரிது.




No comments:

Post a Comment